ALLAMA DR. SATHAVATHANI SHAIK THAMBI PAVALAR
குமரி மாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரில்
காங்கிரஸ் சார்பில் சுதந்திரப் போராட்டக் கூட்டம்
முதன்முதலாக சதாவதானத்தை நிகழ்த்திக்காட்டிய
சாதனையாளரும் மிகச்சிறந்த தேசியவாதியுமான
சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது
திடீரென்று அவர்முன் ஒரு கல் வந்து விழுகிறது.
மேடையிலிருந்தோரும் கூட்டத்தினரும் அதிர்ந்து விடுகின்றனர்.
ஆனால் பாவலரோ நிதானமாக் கனிந்து அக்கல்லை
எடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டுப் பேச்சைத் தொர்கிறார்.
இக்கல் பாவலர் மேல் எறியப்பட்ட கல் அன்று:
மக்கள் விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரசின் மேல் எறியப்பட்ட கல்
. காங்கிரசின் பெயரால் பாவலர் மேல் விழுந்த இக்கல்,
கண்ணாடிப் பெட்டியில் காட்சிப் பொருளாக வைத்துப் போற்றப்பட
வேண்டிய காலம் தொலைவில் இல்லை:
அண்மையிலேயுள்ளது
. ‘விடுதலைக்கு உழைத்த பாவலர் மேல் விழுந்த கல்‘ –
என்று பொறிக்கப்பட்டு போற்றப்படப் போகிறது?
- என்று உணர்ச்சி பொங்க பேசியபின்
அக்கல்லை ஏலத்திற்கு விட்டார்
. கருங்கல் கனத்த பொருளைத் தந்தது.
அப்பணம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் 1920 – லிருந்து காங்கிரஸ் இயக்கத்தின்
போராளிகளை வழிநடத்தியவர்கள்
,பாவலர்,டாக்டர் எம்.இ.நாயுடுசிதாணுப்பிள்ளை ஆகிய மூவர்தான்.
இதில் பாவலரே போராட்டங்களுக்கு ஆஸ்தான தலைவர்.
புரவலரின் பேச்சாற்றல்
போராட்டங்களுக்கு மக்கள் வலுவைத் தேடித்தந்தது.
அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த
காலகட்டத்தில், இரவிப்புதூர் என்னுமிடத்தில் பாவலர் தலைமையில்
ஒரு பெருந் தேசிய கூட்டம்,வ.வே.சு. ஐயர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பாவலர் பேச்சை ஆரம்பிக்கிறார் :
கூறை என்றால் திருமணத்திற்குரிய புது ஆடை,
அதற்குக் கைத்தறி ஆடைகளை எடுப்பதே வழக்கம்:
இறப்பின் போதும் புதுஆடை போர்த்துவது வழக்கம்
, அதற்கு மில் துணி எடுப்பர்.
எனவே மண ஆடையாக கைத்தறித் துணியையும்
பிண ஆடையாக மில் துணியையும் அணிவர்
. எனவே நீங்களெல்லாம் மணமக்களா? பிண மக்களா?
மணமக்கள் என்றால் கதர் மட்டுமே அணியுங்கள்!
- என்று கூட்டத்தினரின் சிந்தனையைத் தட்டி எழுப்பிவிட்டு பேச்சை முடித்தார்.
உடனே கூட்டத்தினர் தாங்கள் அணிந்திருந்த மில்துணிகளையும்,
அந்நியத் துணிகளையும் களைந்து ஓரிடத்தில் குவித்தனர்.
சிறிது நேரத்தில் அந்நியத் துணிகள் அங்கே தீய்க்கு இரையாயின.
நாகர்கோவில் தென் திருவாங்கூர்
இந்துக் கல்லூரியில் நான் பயின்ற போது
,எனது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ.ந. மகாலிங்கம் அவர்கள்
ஒருமுறை வகுப்பில் கூறினார் :
இரவிப்புதூர் கூட்டத்தில் கலந்து கொண்ட எனது தந்தையார்
நமச்சிவாயம் அவர்கள், பாவலரின் பேச்சைக் கேட்டு,
தான் அணிந்திருந்த அந்நியத்துணிகளைக் களைந்து
தீச்சுவாலைக்கு தின்னக் கொடுத்து விட்டு,
உள்ளாடையுடன் இரவிப்புதூரில் இருந்து
எங்கள் ஊரான தெங்கம்புதூருக்கு 15 கிலோ மீட்டர் நடந்தே வந்தார்.
இந்நிகழ்ச்சி, பாவலரின் பேச்சு தென்பகுதிகளில்
சுதந்திர சேவையின் சீவனாக விளங்கியமைக்குச் சான்றாகும்.
”அறியாத இளம் பருவத்தே எனக்கு
அரசியல் ஞானப்பாலூட்டிய அம்மையார் மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் ஆவார்” –
என்று பொருளாதார நிபுணர் டாக்டர் பா. நடராஜன் அவர்களும்:
”1937 - ம் ஆண்டில் நாகர்கோவில் நகராண்மைக் கழகத்திடலில்
பாவலர் பேசிய வீர முழக்கத்தில் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்” -
என்று தஞசைத் தமிழ் பல்கலைக்கழகத்தின்
முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்களும்
கூறியுள்ள சாட்சியங்கள்,
ஏராளமான இளைஞர்களின் உள்ளத்தில்
சுதந்திர வேள்வியை மூட்டிய சிறப்பு பாவலருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.
பா. ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள்
பாவலரிடம், இலக்கிய ஞானம் கற்றவர்களாவர்.
‘திலக் சுயராஜ் நிதி‘ – க்காக தெருத்தெருவாகப்
பாலர் தலைமையில் தேசியப் பாடல்களைப் பாடிச்சென்று நிதி வசூல் செய்தனர்.
காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டம்
ஆரம்பித்தவுடன், ”கள்ளுக் குடியாதே ஐயா” – என்ற இசைப் பாடலை
எழுதி, ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தது
எனப் பாவலரின் சுதந்திரப் போராட்டப் பணி பரந்து செல்கிறது.
;